தெ ரியாத ஒன்றின் மீது பயம் வருவது இயல்புதான். இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக மாற்றும் முன்னெடுப்புகள் வரவேற்கப்பட வேண்டியதுதான் என்றாலும், டிஜிட்டல் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்துவது அதன் முதல் படியாக இருக்க வேண்டும்.
இல்லையேல், அது பற்றிய அச்சம் மக்களிடையே எழுந்து அத்தனை முயற்சிகளுக்கும் அதுவே முட்டுக்கட்டையாகிவிடும். மக்களை அச்சப்படுத்தும் அப்படியொரு விஷயம் இப்போது நடந்திருக்கிறது. இதுபற்றி பயப்படுவதைவிட, என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி 'Any desk' என்ற மொபைல் செயலி பற்றி எச்சரிக்கை செய்திருந்தது. UPI மூலம் இந்த ஆப் நம் பணத்தைத் திருடுகிறது என்பதே அந்த எச்சரிக்கை. அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் UPI பேமென்ட்களுக்கு பொறுப்பான NCPI (National Payments Corporation of India) அமைப்பும் Anydesk செயலி பற்றி ஓர் எச்சரிக்கை செய்தது. அதில், Anydesk ஆப் மூலம் போலியான UPI பேமென்ட்கள் நடப்பதால் அந்த ஆப்பை யாரும் தரவிறக்கம் செய்ய வேண்டாமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும் குறுஞ்செய்தி மூலமும் இந்தச் செயலி பற்றி ஃபார்வர்டுகள் அதிகரிக்கத் தொடங்கின. உண்மையில், இந்தச் செயலியால் பிரச்னையா அல்லது வாட்ஸ் அப்பில் சுற்றும் எண்ணற்ற போலி ஃபார்வர்டுகளில் இதுவும் ஒன்றா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. RBI மற்றும் NCPI அமைப்புகள் ANYDESK பற்றி எச்சரித்திருப்பது உண்மைதான். எனவே, இந்தச் செயலி பிரச்னைக்குரியது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ANYDESK-தான் பிரச்னை என நாம் எடுத்துக்கொண்டால் அடுத்து இதே வேலையை இன்னொரு பெயரில் வேறு ஒரு செயலியும் செய்யலாம், நமக்கே தெரியாமல். எனவே, ANYDESK என்ன செய்து ஏமாற்றுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம். -
முதலில் குறுஞ்செய்தி மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ ANYDESK செயலியைத் தரவிறக்கச் சொல்லி விளம்பரம் வரும். அதிலிருக்கும் இணைப்பைக் க்ளிக் செய்தால் செயலி நம் மொபைலில் இன்ஸ்டால் ஆகிவிடும். - பின், நம் மொபைலில் 9 டிஜிட் கோடு எண் ஒன்று உருவாகும். அந்த எண்ணைப் பகிரச் சொல்லி கேட்பார்கள். நாமும் எதற்கு எனத் தெரியாமல் தந்துவிட்டால், அந்த எண்ணை அவர்கள் மொபைலில் உள்ளீடு செய்துவிடுவார்கள். இதன் மூலம் நம் மொபைலின் ஆக்ஸஸ் முழுவதும் அவர்களுக்குக் கிடைத்துவிடும். அதற்கான செக்தான் அந்தக் கோடு. அது எதற்கெனத் தெரியாமலே நாம் பகிர்ந்திருப்போம். - இப்போது, நம் மொபைலில் நம் கையிலிருந்தாலும் ஏமாற்றுக்காரர்கள் நாம் செய்வது போன்ற நிதி சார்ந்த டிரான்ஸாக்ஷன்களை அவர்களில் மொபைலிலிருந்தே செய்ய முடியும். NCPI-ன் எச்சரிக்கைபடி இந்த வழியில் நம் வங்கியிலிருந்து மட்டுமல்ல;
பேடிஎம், ஃபோன்பே போன்ற வாலட்களிலிருந்தும் அவர்களால் பணம் எடுக்க முடியும்; நிதிப் பரிவர்த்தனைகள் செய்ய முடியும். மார்ச் மாதம் NCPI தந்த அறிக்கைப்படி இதுபோன்ற 5-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருக்கின்றன. உண்மை என்னவென்றால் பல பேருக்குப் பணம் எடுக்கப்பட்ட பின்னர் என்ன செய்ய வேண்டுமெனத் தெரியாமல் இருந்திருக்கும். இன்னும் சில பேருக்குப் பணம் எடுத்திருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருந்திருக்கும்.
பிரச்னை ANYDESK மட்டுமல்ல. இப்படி, விளம்பரம் மூலம் என்னவென்றே தெரியாமல் நம் மொபைலில் இன்ஸ்டால் செய்யும் செயலிகளும், எதற்காக எனத் தெரியாமல் கால் செய்து கேட்பவர்களிடத்தில் நாம் பகிரும் OTP, CVV, Card number போன்றவையும்தான். அதைப் புரிந்துகொள்வதுதான் இது போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.
