Type Here to Get Search Results !

உளவியல் கதை:- "நாம் நேசிக்கும் ஒருவர் நம்மை மதிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்"...?



உளவியல் கதை:-
 "நாம் நேசிக்கும் ஒருவர் நம்மை மதிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்"...?

V. தணிகை வேலன், திருவண்ணமலை

நம்மை நேசிக்கும் ஒருவரை நாம் மதிப்பதில்லை. நாம் நேசிக்கும் ஒருவரோ நம்மை சிறிதும் மதிப்பதில்லை. இதில் மதிப்பது அல்லது மதிக்காதது என்பதைத்தாண்டி அன்பை பலருக்கும் கையாள தெரிவதில்லை என்பதே உண்மை. அன்பை கொடுப்பதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. அன்பும் அக்கறையும் வாழ்வில் மிகவும் முக்கியமானது. சின்ன சின்ன விஷயங்களுக்கும் பிறரை மனதார பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். மனதாரப் பாராட்டுவதும், அன்பான வார்த்தைகளை வெளிப் படுத்துவதும் அவர்களை மட்டுமல்ல, நம்மையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும்.

சிலர் மீது அன்பு பாராட்டினால் அவர்கள் அதனால் மகிழ்ச்சி கொள்ளாமல் பயம் கொள்வார்கள். இதில் ஏதேனும் உள்குத்து இருக்குமோ என்று அச்சப்படுவார்கள். இதனால் அவர்களுக்கு என்ன ஆதாயம் என்று மனதால் தேட முற்படுவார்கள். இந்தப் போக்கு முற்றிலும் தவறு. முதலில் இதிலிருந்து நாம் வெளிவர வேண்டும்.

நாம் நேசிக்கும் ஒருவர் நம்மை மதிக்கவில்லை என்றால் அவர்களிடம் இருந்து சற்று விலகி இருந்து, தக்க சமயத்தில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். இதன் மூலம் அவர்கள் நம்முடைய உண்மையான அன்பை உணர்ந்து கொள்வார்கள். அன்பால் எதையும் மாற்ற முடியும். வாழ்க்கை அழகாக இருக்க அன்பும், பரிவும், பாராட்டும் குணமும் அவசியம்.

நேசிப்பது என்பது ஒருவரின் நிறை குறைகளோடு, உண்மையாய், எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி, நிரந்தரமாய் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நேசிப்பதுதான் சிறந்தது. மற்றவர்களை நம்மிடம் அன்பு செலுத்தும்படி கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் நம்மை அன்புக்கு தகுதியானவர்களாக ஆக்கிக்கொள்ள முடியும். பிறரிடம் அன்பு செலுத்த தயங்காதவர்களாக உருவாக்கிக்கொள்ள முடியும். நம்மை நேசித்தவர்கள் உதாசீனப்படுத்திய பின்பும் அவர்களை வெறுக்க தோன்றாது. இதுதான் நேசிப்பதின் சிறப்பு.

நாம் நேசிக்கும் நபர்கள் செய்யும் தவறுகள் கூட நமக்குப் பெரிதாக தெரிவதில்லை. மன்னித்து விடுகிறோம். அத்துடன் அவர்கள் பேசாததை நினைத்து கவலைப்படவும் செய்கிறோம். அவர்கள் புறக்கணித்தாலும் வலியச்சென்று பேச முற்படுகிறோம். அவர்களுக்காக காத்திருக்கவும் செய்கிறோம். இதெல்லாம் நாம் அவர்களை உண்மையாக நேசித்ததின் அடையாளமாகும். நேசம் என்பது சுவாசிப்பதுபோல. ஆத்மார்த்தமாக அதுவாகவே வரவேண்டும். நேசித்து பார்க்கும்பொழுதுதான் அதன் உண்மையான ஆனந்தம் நமக்குப் புரியும். வாழ்கின்ற வாழ்க்கையே அற்புதமானதாகத் தெரியும். உண்மையான நேசம் மனதைவிட்டு என்றும் அகலாது.

நேசிப்பது என்பது ஒரு கற்றல் செயல் முறையாகும். முதலில் நம்மை நாமே நேசிக்கத் தொடங்குவது மற்றவர்களை நேசிப்பதற்கும், வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் உதவும். அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகள் யாரை நேசிப்பது என்பதை நமக்கு கற்றுக்கொடுக்கும்.

நாம் அன்புடன் செய்யும் சின்ன செயல் கூட ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிடும். உலகில் அன்பைவிட வலிமையானது எதுவுமில்லை!.

 அதிகாரம் செய்யாத மனமாற்றதை அன்பு செய்யும் என்ற கதை ஒன்று பார்ப்போம்... 

அதிகாரமும், சட்டமும் செய்ய முடியாத மனமாற்றத்தை, அன்பு என்னும் வலிமை மிகு ஆயுதம் நொடியில் செய்து விடும் என்பதை உணர்த்தும் கதையை பார்க்கலாம்.
ஊரின் ஒதுக்குப்புறத்தில், குடில் அமைத்து தங்கியிருந்தார் ஒரு துறவி. அவரைப் பார்க்க பலர் வருவார்கள். தங்கள் மனக் கவலையைப் போக்கும் அந்த துறவிக்கு, தட்சணையாக சில பொருட்களையோ, பணமோ வழங்கிவிட்டுச் செல்வார்கள். துறவி தன்னுடைய பணிகள் முடிந்ததும், இரவு நேரங்களில் விளக்கொளியில் அமர்ந்து, சிறந்த ஞான நூல்களை வாசிப்பார். அந்த நூல்களில் கூறியிருக்கும் உண்மை நிலையை ஆராய்ந்து பார்ப்பதே அவரது வாடிக்கையாக இருந்தது. ஒரு நாள் இரவு, அவர் நூல்களை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த குடிலுக்குள் ஒரு திருடன் நுழைந்தான். சப்தம் வராத அளவுக்கு அவன் மிக எச்சரிக்கையாக இருந்தும் கூட, அவனது கால் பட்டு குடிலுக்குள் இருந்த ஒரு பொருள் உருண்டு சப்தத்தை உண்டாக்கியது.

சப்தம் கேட்டு திரும்பிய துறவி, ‘ஓசை எழுப்பாதே! நூலின் மீதான என் கவனம் சிதறுகிறது’ என்று சொல்லி விட்டு, மீண்டும் நூலைப் படிப்பதில் கவனம் செலுத்தினார். துறவியின் அந்த வார்த்தையைக் கேட்டு பயந்து போன திருடன், தான் இடுப்பில் வைத்திருந்த கூரான கத்தியை எடுத்தான். அப்போது துறவி அவனைப் பார்க்காமலேயே, ‘உனக்கென்ன வேண்டும்? பணமா? அது அந்த இழுப்பறையில் இருக்கிறது, எடுத்துக்கொள்!’ என்று இழுப்பறை இருந்த திசையை நோக்கி கையைக் காட்டினார். சற்றே திகைப்பில் ஆழ்ந்தாலும், கையில் கத்தியைப் பிடித்தபடியே சுதாரிப்புடன், இழுப்பறை இருந்த திசைக்கு நகர்ந்தான் திருடன். பின்னர் அந்த இழுப்பறையில் தன் கையை வைத்தான்.

அப்போதும் அந்தத் துறவி தலை நிமிராமல், ‘மெதுவாக இழு. இழுப்பறை விழுந்து விடப் போகிறது’ என்று கூறியபடி, மீண்டும் நூலை ஆராயத் தொடங்கினார். திருடனுக்கு மேலும் திகைப்பு. மர இழுப்பறையை இழுத்தான். அப்போது துறவி மீண்டும் பேசினார். ‘நாளை அரச காவலர்கள் வருவார்கள். அவர்களுக்கு வரி செலுத்த வேண்டும். வரியை செலுத்தாமல் இருப்பது நல்ல குடிமகனுக்கு அழகல்ல. எனவே அதற்கு மட்டும் கொஞ்சம் பணத்தை வைத்து விட்டு, மீதம் இருக்கும் அனைத்தையும் எடுத்துக் கொள்!’ என்றார். திருட வந்தவனுக்கு கைகால் உதறியது. அந்த துறவி சொன்னது போலவே கொஞ்சம் பணத்தை வைத்து விட்டு மீதமிருந்த பணத்தை எடுத்துக்கொண்டான். பின்னர் வாசலை நோக்கி நகர்ந்தான்.
துறவி கூறினார். ‘கொடுத்தவனுக்கு நன்றி சொல்வது தான் நல்ல பழக்கம். நன்றியில் தான் நல்ல விஷயங்களே ஆரம்பமாகின்றன’. இப்போதும் அந்தத் திருடனை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. திருடன் வாய் குளறியபடியே, ‘நன்றி’ என்று சொல்லி விட்டு, வேகமாக செல்ல முயன்றான். ‘கதவை சாத்திக் கொண்டு போ. இல்லையெனில் காற்றில் விளக்கு அணைந்து விடும்’ என்றார் துறவி. துறவி கூறியபடியே குடிலின் கதவை சாத்திக் கொண்டு, விட்டால் போதும் என்பது போல் வேகமாக ஓட்டம் பிடித்தான். சில நாட்கள் கழித்து அந்த திருடன், அரச காவலர்களிடம் பிடிபட்டான். அவன் எங்கெல்லாம் திருடினான் என்ற உண்மையை காவலர்களிடம் ஒப்புக்கொண்டான். சாட்சியம் சொல்ல காவலர்கள், துறவியையும் அழைத்தனர்.
அரசவைக்கு வந்த துறவி, ‘என்னை எதற்காக அழைத்தீர்கள்?. இவன் எனக்கு எந்த தீமையும் செய்யவில்லையே. இவன் அப்போது கஷ்டத்தின் பிடியில் இருந்தான். அவனுக்கு பணம் தேவையாக இருந்ததால், நான்தான் அவனுக்கு பணம் கொடுத்து உதவி செய்தேன். என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு, அதற்கு நன்றி சொல்லிவிட்டு, கதவையும் சாத்திக் கொண்டுதான் சென்றான். இதுபற்றி அவனையே கேளுங்கள்’ என்று காவலர்களிடம் கூறினார். மேலும் அந்த திருடனை நோக்கி, ‘நான் சொல்வது உண்மைதானேயப்பா?’ என்று கேட்டார். திருடனின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது. அது அவன் மனம் திருந்தி விட்டதை வெளிப்படுத்தியது. குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்து வெளியில் வந்த திருடன், துறவியிடமே சென்று சீடனாக சேர்ந்தான். சந்தர்ப்பம் ஒருவனை குற்றவாளியாக மாற்றலாம். ஆனால் அவர்கள் மனம் மாற சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட வேண்டும். அதிகாரமும், சட்டமும் செய்ய முடியாத மனமாற்றத்தை, அன்பு என்னும் வலிமை மிகு ஆயுதம் நொடியில் செய்து விடும்!.

 

Top Post Ad